கௌதம் மேனன் இயக்கிய படங்களிலேயே ஒரு வித்தியாசமான ஒரு காதல் கதை கொண்ட திரைப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்தாலும், இன்றும் பலரின் நினைவலைகளில் ஊஞ்சலாடும் ஒரு காதல் காவியமாக மலர்ந்து நிற்கின்றது.
இளம் ஜோடிகளின் காதலை ஒரு புதிய கோணத்தில் காட்சிப்படுத்தி காதலர்களின் வாழ்க்கையில் புது வேகம் பாய்ச்சிய இப்படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடினர். அதுமட்டுமல்லாது கார்த்திக் - ஜெஸ்ஸி கதாபாத்திரங்களாக மாறிய சிம்பு - திரிஷா. ஃப்ரேமுக்குள் அவர்களை காதலர்களாக அடக்கிய விதத்தை ரசிகர்கள் வெகுவாக என்ஜாய் செய்தனர்.
மேலும் அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் காதலால் நிரம்பி வழிந்தன. அத்தோடு அந்த காட்சிகள் யாவற்றையும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை அழகு படுத்தியது. இவரின் இசையால் இப்படத்தின் பாடல்கள் அனைத்திலும் காதல் வழிந்தோடியது. வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை கூட இசையால் வெளிப்படுத்துவதில் வல்லவரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நிகர் வேறு யாருமே இல்லை எனக் கூறலாம். 13 ஆண்டுகளை கடந்து விட்ட பின்பும் காதல் பாடல்களின் பிளே லிஸ்டில் நிச்சயமாக இப்பாடல்கள் யாவும் தொடர்ந்தும் அடங்கி இருக்கும்.
இதுவரை காலமும் திரைத்துறையில் ஒரு துறுதுறு இளைஞனாகவே நடித்து வந்த சிம்புவை இப்படம் ஒரு அமைதியான, ரொமான்டிக்கான, அடக்கமான ஒரு பையனாக அழகாக சித்தரித்தது. இதன் மூலமாக ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. இதற்கு பிறகு இப்படி ஒரு காதல் மன்னனாக சிம்புவை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கமும் சிம்பு ரசிகர்களுக்குள் எழுந்தது.
இப்படத்தில் காதலர்களாக நடித்த சிம்புவும் - திரிஷாவும் ரசிகர்களை ஒரு பக்கம் வெகுவாக கவர்ந்தாலும் கரகர குரலால் மெட்ராஸ் பாஷையில் படம் முழுக்க டிராவல் செய்து எளிதில் ரசிகர்களின் மனங்களை ஈர்த்துக் கொண்டவர் விடிவி கணேஷ். அதாவது "இங்க என்ன சொல்லுது 'ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா'" என்ற அவரின் டயலாக் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றது.
இவ்வாறு பலரது மனங்களிலும் மறக்க முடியாத அளவிற்கு இடம்பிடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை கடந்தாலும், இன்னும் பல ஆண்டுகளுக்கு பிடித்த காதல் படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
Listen News!