பத்து தல படத்திற்கு பின்னர் சிம்பு யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நேற்று சிம்புவின் 48-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. அதன்படி சிம்பு நாயகனாக நடிக்கும் அப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் இயக்க உள்ளார்.
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சிம்புவின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக இது இருக்கும் என்றும் இப்படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இது தேசிங்கு பெரியசாமி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்காக தயார் செய்த கதை என்றும், அதில் ரஜினியால் நடிக்க முடியாமல் போனதால், தற்போது சிம்புவை வைத்து அப்படத்தை எடுக்க தேசிங்கு பெரியசாமி களமிறங்கி உள்ளாராம்.சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்ததால், அவர் தனது சம்பளத்தை ரூ.40 கோடியாக உயர்த்திவிட்டதாக சமீபத்தில் கூட செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க சிம்பு தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சிம்புவின் இந்த சம்பள குறைப்புக்கு பின் ஒரு மாஸ்டர் பிளான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது என்னவென்றால், இப்படத்தின் மூலம் தனது மார்க்கெட் கண்டிப்பாக உயர்ந்துவிடும் என்பதால், இதற்கு கம்மியாக சம்பளம் வாங்கிவிட்டு, இதன் பின் தான் நடிக்க கமிட் ஆகும் படங்களில் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தி கேட்கவே சிம்பு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!