நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப் பெற்றுள்ளது.முன்னதாக வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்களை போல மாவீரன், 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 80 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. அடுத்தடுத்த படங்களின் வரவும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டாததற்கு காரணமாக அமைந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராணுவ வீரராக இந்தப் படத்தில் சிவா நடித்துவரும் நிலையில், படத்தில் தன்னுடைய ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவற்றை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார். சமீப காலங்களில் அவரை தொப்பியுடனேயே பார்க்க முடிந்தது. கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் எஸ்கே21 படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரு தினங்களில் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதவகையில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய போர்க் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகை சாய் பல்லவி பங்கேற்கவுள்ளார். சென்னை ஷெட்யூலை தொடர்ந்து மீண்டும் படத்தின் சூட்டிங் காஷ்மீரிலேயே நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறப்பான கதைக்களத்துடன் கூடிய கமர்ஷியல் படங்களில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின்மூலம் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்துள்ள நிலையில், இந்த கூட்டணி சிறப்பான வெற்றிக்கூட்டணியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே கூற வேண்டும்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!