தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் கே.வி.ஆனந்த். இவர் கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த தென்மாவின் கொம்பத்து என்கிற மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து அவரை தமிழுக்கு அழைத்து வந்த இயக்குநர் கதிர் தான். அவர் இயக்கிய காதல் தேசம் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் கேவி ஆனந்த்.
இதையடுத்து நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கேவி ஆனந்த், சிவாஜி படத்துக்கு பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அந்த வகையில் பிருத்விராஜ் நடித்த கனா கண்டேன் படம் மூலம் இயக்குநரான கேவி ஆனந்துக்கு முதல் படம் பெரிய அளவில் வெற்றியை தராவிட்டாலும், இரண்டாவதாக அவர் இயக்கிய அயன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
பின்னர் கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வெற்றிகண்ட இவர் கடந்த 2021-ம் ஆண்டு மரணம் அடைந்தார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்தது தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பாக அமைந்தது. இயக்குனர் கே.வி. ஆனந்துக்கு சினேகா, சாதனா என இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், கே.வி.ஆனந்தின் மகள் சாதனாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் விஷ்ணு ராஜ் என்பரை கரம்பிடித்து உள்ளார். இவர்கள் இருவருமே ஆர்கிடெக்ட் படித்தவர்கள் தான். இவர்களது திருமணம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இன்று மாலை இத்தம்பதியினரின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
Listen News!