விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லியோ. அதிக எதிர்பார்ப்புடன் உருவான லியோ, இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கைதி, விக்ரம் படங்களை தொடர்ந்து லியோவும் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகியுள்ளது.
அதிரடி ஆக்ஷன் படமான இதில் விஜய் உடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கவுதம் மேனன், ஜார்ஜ் மரியான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தமிழகத்தில் 9 மணிக்கு தான் லியோ முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டாலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே லியோ படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கு படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை தங்களது எக்ஸ் தள பக்கங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
லியோ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸான போது ரசிகர்கள் அங்குள்ள இருக்கைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் திரையரங்க நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக இருக்கைகளுடன் லியோ முதல் காட்சிக்கு ரோகிணி தியேட்டர் தயாராகிவிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக ரோகிணி தியேட்டரில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் கொண்டாடுவர். ஆனால் இம்முறை அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த லியோ படத்தின் முதல் காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அதற்கு பதிலாக முதல் காட்சியை காலை 11.30 மணிக்கு திரையிட உள்ளதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி கொண்டாட்டங்களுக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளதால் ரோகிணி திரையரங்கம் களையிழந்து காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!