மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார். அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள டாப் நட்சத்திரங்கள் லோகேஷ் கனகராஜின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர்.
டோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் அழைத்தாலும், தமிழ் திரையுலகில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் லோகேஷ். அதன்படி தற்போது அவர் இயக்கத்தில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், நடிகை பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
லியோ படத்தை இன்னும் ஓரிரு மாதத்தில் முடித்து அதனை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு கொண்டுவர உள்ளனர். லியோ முடிந்ததும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ள லோகேஷ், அடுத்து கமலுடன் விக்ரம் படத்தின் அடுத்த பாகம், சூர்யா உடன் இரும்புக்கை மாயாவி என வரிசையாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு படங்களை புக் செய்து வைத்து உள்ளார்.
இந்நிலையில், விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் லியோ படத்தில் பணியாற்றிய லோகேஷ், 19 ஆண்டுக்கு முன் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டாராம். விஜய்யின் சச்சின் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடந்தபோது, அதைப்பார்க்க தன் நண்பர்களுடன் சென்றிருந்தாராம் லோகேஷ்.
அப்போது கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது, அதில் பின்னணியில் நடிக்க அவரது நண்பர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததாம், ஆனால் லோகேஷ் அதனை மிஸ் பண்ணிவிட்டாராம். இருந்தாலும் விஜய்யின் நடிப்பை ரசித்துப் பார்த்ததாக தெரிவித்துள்ள லோகேஷ், தற்போது அவரை வைத்து இரண்டு படங்களை இயக்கிவிட்டேன் இதற்குமேல் என்ன வேண்டும் என சிலாகித்துப்போயுள்ளாராம்.
Listen News!