தமிழ் திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் மனோபாலா. கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த மனோபாலா நேற்று உயிரிழந்தார். அவரின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் மறைவுச் செய்தி அறிந்ததும் அவரின் இல்லத்திற்கு படையெடுத்த தமிழ் சினிமா பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் விஜய், சித்தார்த், யோகிபாபு, விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், தலைவாசல் விஜய், நாசர், சாந்தனு மற்றும் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எச்.வினோத், லோகேஷ் கனகராஜ், பாக்கியராஜ், சுந்தர் சி, சமுத்திரக்கனி உள்பட ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதுதவிர அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக நிர்வாகி ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் மனோபாலாவின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடந்தன.
இதையடுத்து அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்ல தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மனோபாலாவின் உடலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது செல்லும் வழியெல்லாம் திரண்டிருந்த பொதுமக்கள் மனோபாலாவின் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடிகர் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ள மனோபாலா 20 படங்களுக்கு மேல் இயக்கியும் உள்ளார். சினிமாவில் சாதிக்க துடித்த பலருக்கு உதவிக்கரம் நீட்டியவர் மனோபாலா.
அவரின் உதவியால் சினிமாவுக்குள் வந்து சாதித்த பிரபலங்களுள் அஜித்தின் துணிவு படத்தை இயக்கிய எச்.வினோத்தும் ஒருவர். இப்படி திரையுலகில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் சிறந்த மனிதராக இருந்து வந்த மனோபாலா மறைந்தாலும், அவரின் கலைப் படைப்புகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதே உண்மை.
Listen News!