இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் மற்றும் பல ஓடிடி தளங்களின் பயன்பாடு பலவாறு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஓடிடி தளங்களில் ஆபாசமான மொழி பயன்பாடு, தவறான வார்த்தைகள், அநாகரீகமான செயல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில் "இந்த அத்துமீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்படி அவை உறுதிப்படுத்தப்பட்டால் அதை மத்திய அமைச்சகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தகுந்த நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும்" எனவும் எச்சரித்துள்ளார் .
மேலும் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் "படைப்பாற்றல் என்ற பெயரில் ஆபாசங்களை, தவறான விஷயங்களை மற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஓடிடி தளங்களில் அதிகரித்து வரும் அத்துமீறிய நாகரீகமற்ற உள்ளடக்கங்கள் குறித்து எழும் புகார்கள் மீது அரசாங்கம் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது" எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது "இது சார்ந்த விதிகளில் ஏதாவது மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உடனடியாக அமைச்சகம் அதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளது. ஓடிடி தளங்களுக்கு படைப்பாற்றலை உபயோகிக்க அதிக சுதந்திரம் உள்ளது. ஆனால் ஆபாசம், வன்முறை கலந்த படைப்பாற்றலை எம்மால் எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே இதுவரையில் பெறப்பட்டுள்ள புகார்களில் இருந்து முதல் நிலையில் உள்ள 90 % புகார்களுக்கு சிறந்த தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அசோசியேஷன் லெவலில் இருக்கும் புகார்கள் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சில நாட்களாக புகார்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதையும் அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றையும் தாண்டி அரசிடம் வரும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
Listen News!