தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான சங்கரின் 'பாய்ஸ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
அத்தோடு சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், சமூக பிரச்சனைகள் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை துணிச்சலாக பதிவிட்டு வருகின்றார். அதிலும் குறிப்பாக சித்தார்த் பெரும்பாலும் சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்த கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்துபவர்.
அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு சித்தார்த் பதிவிட்டிருந்தது இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.
இதனையடுத்து தன்னுடைய ட்விட்டர் தளத்தில் இருந்து ஒதுங்கினார் சித்தார்த். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுரை விமான நிலைய சிஆர்பிஎப் அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
அதாவது இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "மதுரை விமானநிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவர்கள் வயதான என் பெற்றோர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள். மேலும், பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் இந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன்.
ஆனாலும், சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்' என்று காட்டமாக கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு ஆனது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் சித்தார்த்திற்கு தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!