நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜவானை அட்லீ இயக்கியுள்ளார். ஷாருக்கான் - அட்லீ காம்போவில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு ஆகியோரும் இணைந்துள்ளனர்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்குப் பின்னர் தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் படமாக ஜவான் காணப்படுகிறது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார் ப்ரியாமணி. ஜவான் படத்திலும் ஷாருக்கானுடன் இணைந்து ஆட்டம் போட்டு அசத்தியுள்ளார் ப்ரியாமணி.
இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ப்ரியாமணி ஷாருக்கான் குறித்தும், இயக்குநர் அட்லீ பற்றியும் பேசியிருந்தார். அதாவது, "ஜவான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு அட்லீ தான் முதல் காரணம். ஜூம் காலில் எனக்கு அட்லீ கதை சொன்னபோது ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் தான் உடனே ஓக்கே சொன்னேன்" எனக் கூறியிருந்தார்.
அதேபோல், "சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்குப் பின்னர் மீண்டும் ஷாருக்கானுடன் நடிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை" என பேசியிருந்தார். இதில், ஜவான் படத்தின் கதை குறித்து ப்ரியாமணி பேசியதை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். வழக்கமாகவே அட்லீ இயக்கிய படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்குவதை பார்க்க முடியும். ராஜா ராணி முதல் மெர்சல் வரை, அட்லீயின் அனைத்துப் படங்களும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கின.
இப்போது அவர் இயக்கியுள்ள ஜவானும் விஜயகாந்த் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதனை நேரடியாக குறிப்பிடாமல் "என்னது... கதையா..?" என ஒற்றை வார்த்தையில் பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Listen News!