• Sep 20 2024

கான்ஸ்டபிளாக நாக சைதன்யா கலக்கினாரா..? கவிழ்த்தாரா..? 'கஸ்டடி' படத்தின் திரை விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, க்ரித்தி ஷெட்டி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள படம் 'கஸ்டடி'. மேலும் இவர்களுடன் இணைந்து இப்படத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, சம்பத், பிரேம்ஜி அமரன் என பலரும் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதையின் கரு

இப்படத்தினுடைய கதைக்களத்தை முதலில் நோக்குவோம். அதாவது 90களில் ஆந்திராவில் நடக்கும் கதையாக இது அமைந்திருக்கின்றது. அந்தவகையில் ராஜமுந்திரியில் நடக்கும் வெடி விபத்து ஒன்றில் பள்ளி குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்படுகின்றனர். இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது. 

இந்நிலையில் மிகப்பெரிய ரௌடியாக இருக்கும் அரவிந்த்சாமி சி.பி.ஐ. அதிகாரியாக வரும் சம்பத்திடம் பிடிபடுகிறார். அப்போது நடக்கும் கார் விபத்து ஒன்றின் போது இருவரும் போலீசில் எதிர்பாராத விதமாக சிக்குகின்றனர். இதன் பின்னர் சிறையில் இருக்கும் அரவிந்த்சாமியை காப்பாற்ற முதலமைச்சர் பிரியாமணி, போலீஸ் உயரதிகாரி சரத்குமார்  உட்பட அதிகார வர்க்கத்தினர் பாலாறும் முயற்சிக்கின்றனர்.

இவர்கள் அனைவரையும் எதிர்த்து  சம்பத்துடன் சேர்ந்து கான்ஸ்டபிள் நாகசைதன்யா அரவிந்த் சாமியை பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்கிறார். இடையில் நாகசைதன்யாவின் காதலியான க்ரித்தி ஷெட்டியும் இவர்களுடன் இணைகிறார். ஆனால் வழியில் அரவிந்த்சாமியை காப்பாற்ற முயற்சி செய்தவர்களாலேயே அரவிந்த்சாமியை கொல்லவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த மர்மத்தின் பின்னணி என்ன? பெங்களூரு செல்லும் 4 பேரின் கதி என்ன ஆனது? என்பது தான் இப்படத்தினுடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது.


படம் எப்படி?

அந்தவகையில் படத்தின் முதல் அரை மணி நேரம் தெலுங்கு டப்பிங் படம் பார்க்க வந்து விட்டோமா? என தோன்றும் அளவுக்கு ரசிகர்களின் பொறுமையை பெரிதும் சோதிக்கிறது. ஆனால் பின்னர் போலீசிடம் அரவிந்த்சாமி சிக்குவதில் இருந்து விறுவிறு பின்னணி இசையுடன் ஆடியன்ஸை சீட்டில் உட்கார வைத்து கட்டிப் போடுகிறது படம். 

அதிலும் குறிப்பாக முதல் பாதியில் வரும் அரவிந்த் சாமியின் ஒன்லைனர்கள்,  போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அணையின் தண்ணீர் செல்லும் குழாய்க்குள் நடக்கும் சண்டை படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

அதேபோன்று இரண்டாம் பாதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் ஜீவா, கயல் ஆனந்தி பிளாஷ்பேக் காட்சிகள் உட்பட ஆங்காங்கே வெங்கட்பிரபுவின் லாஜிக் எதிர்பார்க்கக்கூடாத ஸ்கிரீன்பிளே கைவண்ணம் பளிச்சிடுகிறது என்று தான் கூற வேண்டும்.

இருப்பினும் இப்படத்தில் அரவிந்த் சாமியை கொல்வதற்கான காரணமும் வலுவாக இல்லை. அதேபோல் பாடல்கள் படத்துக்கு தடையாக இருந்தாலும் பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது.


கதாபாத்திரங்களின் நடிப்பு எப்படி?

இப்படத்தைப் பொறுத்தவரையில் முகத்தில் எதிர்பார்த்த ரியாக்ஷன் வராவிட்டாலும் நாக சைதன்யா ரசிகர்களின் நம்பிக்கையை தன் நடிப்பின் மூலமாக பெறுகிறார். 

அதேபோன்று க்ரித்தி ஷெட்டி பெரிய கேரக்டர் இல்லாவிட்டாலும் படம் முழுக்க வருகிறார். 

மேலும் அரவிந்த் சாமி, சரத்குமார் நடிப்பில் மிரட்ட, பிரியாமணி, ராம்கி, பிரேம்ஜி, சம்பத் ஆகியோர் கொடுத்த கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு 

மொத்தத்தில் வழக்கமான இயக்குநர் வெங்கட் பிரபுவின் ஜாலி கமர்ஷியல் மேக்கிங்கிற்காக 'கஸ்டடி' படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று தான் கூற வேண்டும்.

Advertisement

Advertisement