மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இப்படத்தை அடுத்து பத்து தல என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக் ஆகும். நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது. இது தொடர்பான தகவலை நடிகர் டிஜே அருணாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Listen News!