சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற மிகச்சிறந்த படங்களில் நடித்ததன் மூலம் சூர்யாவுக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சமூக அக்கறையுள்ள படங்களில் நடித்ததன் மூலம் பலதரப்பட்டவர்களையும் அவர் ஈர்த்தார். அதுமட்டுமின்றி திரைப்படங்களை தாண்டி அவர் செய்யும் அகரம் பவுண்டேஷன் உள்ளிட்ட விஷயங்களும் மற்ற நடிகர்களிடமிருந்து சூர்யாவை தனித்து காட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த மாதம் சூர்யா தனது குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார். அவர் சென்ற சமயத்தில் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக அருங்காட்சியகத்துக்கு வந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளையும் மற்றவர்களையும் வெயிலில் நிறுத்தி வைத்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மாணவ, மாணவிகளுக்கு உதவும் சூர்யா இதற்கு அனுமதித்திருக்கக் கூடாது என பலர் கூறினர்.
அதேபோல், இவ்வளவு நாள்கள் தமிழ்நாட்டில் இருந்த சூர்யா - ஜோதிகா இப்போது மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான புகைப்படமும் வெளியானது. மேலும் அந்த வீட்டுக்கு சூர்யா ஹிந்தியில் பெயர் வைத்திருப்பதாகவும் சர்ச்சை வட்டமடித்தது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக செட்டில் ஆகவில்லை, ஜோதிகா பாலிவுட்டில் கமிட்டாகியிருக்கிறார் அதனால்தான் அங்கு சென்றிருக்கிறார்கள் என ஒருதரப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சூர்யா திரையில் இருப்பது போல் நேரில் இருக்கமாட்டார் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "திரைப்படங்களில் மட்டும்தான் சூர்யா நல்லவர் போலவும், ஏழைகளுக்கு உதவுவது போலவும் நடிப்பார். ஆனால் நேரில் அவர் வேறு ஒரு முகம் கொண்டவர்.
தமிழுக்காகவும், தமிழருக்காகவும் குரல் கொடுத்துவிட்டு மும்பையில் பிஸ்னெஸ், பாலிவுட் படம் என கவனம் வைத்து அங்கே செட்டில் ஆகிவிட்டார். ஒருமுறை மும்பை விமான நிலையத்தில், 'எனது மகனையும், மகளையும் புகைப்படம் எடுக்காதீர்கள்' என கடுமையாக திட்டினார். ஆனால் கீழடிக்கு சென்று தனது குடும்பத்தோடு போஸ் கொடுத்தார். சூர்யா திரையில் வேறு மாதிரியும், நேரில் வேறு மாதிரியும் இருப்பார் என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்" என தெரிவித்திருக்கிறார்.
இதனைப் பார்த்த சூர்யா ரசிகர்களும், "தனது மகனையும், மகளையும் புகைப்படம் எடுக்கக்கூடாது என சொல்வதற்கு ஒரு தந்தையாக அவருக்கு உரிமை இருக்கிறது. அதை குறை சொன்னால் எப்படி. அதேபோல் கீழடிக்கு செல்லும்போது அங்கு பத்திரிகையாளர்கள் கூடியதால் புகைப்படம் எடுக்கும் சூழல் உருவானது. நிலைமை இப்படி இருக்க சூர்யா மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி அவரது இமேஜை கெடுக்க வேண்டாம் என தங்கள் பங்குக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர்.
சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்துவருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. படத்தின் ஷுட்டிங் கொடைக்கானலில் நடந்துவந்த சூழலில் அது சமீபத்தில்தான் முடிந்தது. ஷூட்டிங் முடிந்ததை அடுத்து படக்குழுவினருக்கு கொடைக்கானலில் வைத்தே சூர்யா பிரியாணி விருந்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!