கோ.தனபாலனின் இயக்கத்தில் நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் 'பருந்தாகுது ஊர் குருவி'. இப்படமானது பெரிய நட்சத்திர பட்டாளங்கள் எதுவும் இல்லாமல், பல படங்களில் நடித்த துணை கதாபாத்திரங்களாக வந்தவர்களை மட்டும் கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.
கதையின் கரு:
படத்தின் கதையை முதலில் பார்ப்போம். ஓர் இரவு அடர்ந்த காட்டுக்குள் ஒருவனை கொல்ல கும்பல் ஒன்று துரத்துகின்றது. உடனே அவனை காப்பாற்ற முயற்சிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகின்றார். அதன் பின்னர் இறுதியில் என்ன நடந்தது? இதுதான் பருந்தாகுது ஊர்குருவி படத்தின் உடைய மையக்கதை.
அந்தவகையில் சின்ன சின்ன திருட்டுகள், அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் தான் ஆதி (நிஷாந்த் ரூசோ). இவர் ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் சமயத்தில், மிளகுக்காட்டில் யாரையோ வெட்டிப் போட்டிருப்பதாக போலீஸிற்கு உடனடியாக தகவல் வருகிறது.
அந்த இடத்திற்கு வழிகாட்டச்சொல்லி, காவல் அதிகாரி போஸ் ஆதியை தாறுமாறாக இழுத்துக் கொண்டு செல்கிறார். அங்கே சென்றவுடன், ஆதியின் கையுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேசிவிட்டு வரும்வரை, பிணத்தை பார்த்துக்கொள்ளுமாறு ஆதியிடம் கூறுகிறார் போலீஸ் அதிகாரி போஸ்.
இதனையடுத்து ஆதி, கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கையில், பிணமாக கிடந்த நபருக்கு இன்னும் உயிர் இருப்பதை அதன் மூலமாக தெரிந்து கொள்கிறார். அப்போது, அந்த நபரின் தொலைபேசிக்கு யாரோ ஒரு பெண் போன் செய்து, அவரை காப்பாற்றுமாறு ஆதியிடம் அழுது கெஞ்சுகிறார்.
அந்த பெண்ணுடன் பேசியதன் மூலம், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மாறன் என தெரிந்து கொள்கிறார், ஆதி. அதன் பின்னர் சிறிது நேரத்திற்குள் மீண்டும் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி கொலைகார கும்பல் வருகிறது.
அந்தக் கும்பலிடமிருந்து ஆதி மாறனை காப்பாற்றினாரா? மாறனை காப்பாற்றுமாறு கெஞ்சும் அந்த பெண் யார்? மாறனை அந்த கும்பல் கொல்ல முயற்சிப்பது ஏன்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
குறை, நிறைகள்
படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு பிணத்தையும் அதனுடன் அமர்ந்திருக்கும் நாயகனையும் அவர்களது பக்கத்தில் ஒரு பாம்பையும் காட்டி ரசிகர்களை மிரட்டிய இயக்குநர், அதே மிரட்டலை படம் முழுவதும் காட்ட முற்றிலுமாக தவறியிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
அதேபோல் க்ளைமேக்ஸ் காட்சியில் ரசிகர்களுக்கு வரவேண்டிய தொய்வு, படத்தின் இரண்டு-மூன்று காட்சிகளிலேயே வந்து விடுகின்றது.
அத்தோடு சர்வைவல்-த்ரில்லர் வகை கதையாக இருந்தாலும், அந்த ஜானருக்கு ஏற்ற வேகம் படத்தில் ஒரு இடத்தில் கூட இல்லை. எதிர்பார்ப்புகளுடன் வராத ரசிகர்கள் கூட, மொக்கையான திரைக்கதையால் மிகவும் ஏமாற்றம் அடைந்து போகின்றனர்.
அதுமட்டுமல்லாது வயிற்றில் குத்து வாங்கியும், மண்டையில் அடி வாங்கியும் ஒரு நாள் முழுவதும் சோறு தண்ணி இல்லாமல் விவேக் பிரசன்னாவின் கதாப்பாத்திரம் உயிருடன் இருப்பதை ரசிகர்களால் நம்ப முடியவில்லை.
மேலும் க்ளைமேக்சில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
முடிவு
ஊர் குருவிக்கு பருந்தாக மாற தெரியாவிட்டால் பரவாயில்லை..பறக்க கூட தெரியவில்லையென்றால் எப்படி? என்று படத்தைப் பார்த்தவர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.
Listen News!