நடிகர் பார்த்திபன் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர். இவர் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு வெளிவந்த புதியபாதை திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் களமிறங்கினார்.
முதல் படத்திலேயே இவர் தேசிய விருது பெற்று மக்கள் மனதில் முத்திரை படைத்து விட்டார். இவர் வித்தியாசமான கதைகளை தருவதில் வல்லவன். அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு ஒத்த செருப்பு என்கிற படத்தின் மூலம் இந்திய சினிமாவையே வியப்பில் ஆழ்த்தினார். அந்த படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்துற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.
இதற்கு அடுத்தபடியாக அவர் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இப்படத்தை சிங்கிள் ஷாட்டில் படமாக்கி இருந்தார். இதுதொடர்பாக ப்ளூ சட்டை மாறனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே டுவிட்டர் மோதல் நடைபெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை படமாக்க தான் ஆசைப்பட்டதாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார். புகழின் உச்சம் கண்டவர்.
மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். மிக மோசமான சோகம்! பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்” என எம்.கே தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை படமாக்க ஆசைப்பட்டது குறித்து பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று நடிகர் தியாகராஜ பாகவதரின் 114 வது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் ஆசை நிறைவேறுமா? என்பதை அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!