சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இந்துக்களின் பண்டிகைகளில் நவராத்திரி பண்டிகை மிகவும் பிரபலமானது. அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டு வந்த நவராத்திரி பண்டிகை நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் கடைசி நாளான நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.
ரஜினி வீட்டில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளதால், அவர் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் ரஜினியின் மனைவி லதா, அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா ஆகியோர் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
புதுச்சேரி ஆளுநர் தமிழைசை செளந்தரராஜன், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்றார். முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டார். அப்போது தனுஷின் மகன் லிங்கா மற்றும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
மேலும் சினிமா பிரபலங்களை பொறுத்தவரை நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டார். நடிகை மீனா, பழம்பெரும் நடிகை லதா உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்களும் ரஜினிகாந்த் வீட்டு நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நவராத்திரி விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு லதா ரஜினிகாந்த் பரிசுகளையும் வழங்கினார். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!