இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன 'நா ரெடி' பாடலானது தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது.
இப்பாடல் ஆனது வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. அந்தவகையில் தற்போது லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது போதைப்பொருள் பழக்கம், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையில் லியோ பட ‘நான் ரெடி’ பாடல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் ஆன்லைன் மூலமாக இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்தவகையில் அந்த மனுவில் சமூக ஆர்வலர் செல்வம் குறிப்பிடுகையில் "நான் சமூக ஆர்வலர் RTI.செல்வம். நாட்டின் நடக்க கூடிய நல்லவை, கெட்டவை அனைத்துக்கும் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு கண்டு வருகிறேன். தற்போது தமிழக அரசும், காவல்துறையும் போதை தடுப்பு விழிப்புணர்வு செய்து பல குற்ற செயல்களை தடுத்து வருகிறார்கள்.
போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், மேலும் ரவுடியிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அண்ணன் நான் வரவா நான் ரெடியா இருக்கேன் தனியா வரவா என்ற பாடலில் பல வரிகள் காணப்படுகின்றன. மேலும் நடிகர் விஜய் இதுபோன்ற சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் செயல்களை இளைஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தில் போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது "நடிகர் விஜய் மீது போதை தடுப்பு சட்டம் 1985 போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் சமீபத்தில் போதை பொருளை ஆதரிக்கும் வகையிலும் போதை பொருட்களை தடுப்பதில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என்று கூறியிருந்தார்.
ஆகவே ரவுடியிசத்தை தூண்டுதல், தீய போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு இளைஞர்களை தூண்டி விடுதல் போன்ற குற்றத்திக்காக இந்திய தண்டனை சட்டத்தின் சட்டத்தின் கீழ் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!