இந்தி சினிமாவின் மிகவும் அழகான நடிகைகளுள் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை பிரீத்தி ஜிந்தா. இவரின் அழகில் மயங்காதவர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு இவரது துறுதுறு நடிப்புக்கும், கன்னக்குழி சிரிப்புக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.
திருமணத்தை தொடர்ந்து குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். போட்டித் தொடருக்காக சமீபத்தில் இந்தியாவுக்கு வந்துள்ளார். இவர் ஐ.பி.எல் 'பஞ்சாப் சூப்பர் கிங்ஸ்' அணி உரிமையாளராகவும் இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் தற்போது இந்தியாவில் நடந்த 2 சம்பவங்கள் தன்னை மிகவும் பாதித்து விட்டது என தெரிவித்து உள்ளார். அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள பதிவில், ''ஒரு முறை நானும் எனது குழந்தைகளான ஜியாவும், ஜெய்யும் மும்பையில் உள்ள ஒரு பூங்காவில் இருந்தோம்.
அந்த சமயத்தில் ஒரு பெண் ஓடி வந்து எனது மகள் ஜியாவின் கையை பிடித்து, ஈர உதட்டுடன் முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். நான் ஒரு பிரபலமாக மட்டும் இல்லாவிட்டால், அந்த சமயத்தில் அந்த இடத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டிருப்பேன். இந்த நிகழ்வை என்னால் கொஞ்சமும் ஏற்கவே முடியவில்லை.
அதுமட்டுமல்லாது பணம் கேட்டு தொந்தரவு செய்த இன்னொரு சம்பவமும் நடந்து இருக்கிறது. அதாவது ஒருமுறை அவசரமாக விமான நிலையத்துக்கு செல்வதற்காக நான் வீட்டில் இருந்து காரில் ஏற முயன்றேன். அந்த சமயத்தில் வீல் சேரில் ஆக்ரோஷமாக வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், காரின் கதவை தட்டி என்னிடம் பணம் கேட்டார்.
ஒரு தடவை மட்டுமல்லாது இதேபோல பல தடவை அவர் என்னிடம் பணம் கேட்டிருக்கிறார். நானும் அவருக்கு முடிந்த அளவு கொடுத்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னிடம் பணம் இல்லை. கிரெடிட் கார்டு மட்டுமே என் கையில் இருந்தது. என்னுடன் காரில் இருந்த பெண் ஒருவர், பர்சில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தார்.
ஆனால் அந்த நபரோ அது போதாது என அந்த பணத்தை எங்களை நோக்கி வீசி எறிந்தார். அத்தோடு சத்தமிட்டு ஆக்ரோஷமாக கத்த தொடங்கினார். மேலும் விடாமல் எங்கள் காரை பின்தொடர்ந்து எங்களுக்கு கடுமையாக தொந்தரவு தந்தார். இந்த நிலைமைக்கு வருவதற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்திருக்கிறேன்.
நான் விரும்புவது போல எப்படி வேண்டுமானாலும் இருக்க எனக்கு உரிமை இருக்கிறது. எனவே இந்த நிகழ்வை பார்த்து தீர்ப்பு வழங்கும் முன்பாக மக்கள் சற்று இதைப் பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாது பிரபலங்களை குறை கூறுவதையும் நிறுத்துங்கள். ஏனெனில் எந்த ஒரு கதைக்கும் 2 பக்கங்கள் உண்டு. எனது குழந்தைகள் என்பதற்காக அல்ல, குழந்தைகள் எப்போதுமே குழந்தைகளாக நடத்தப்பட வேண்டும்.
மேலும் நாங்கள் தான் பிரபலங்கள். எம்முடைய குழந்தைகள் அல்ல. ஒருவேளை இந்த சம்பவத்தின் போது அந்த ஆசாமி அடிபட்டிருந்தால் நான் குற்றவாளி ஆகியிருப்பேன். எல்லோரும் என் மீது மோசமாக குற்றம் சாட்டியிருப்பார்கள். ஏனெனில் அதற்கு காரணம் நான் ஒரு பிரபலம் அல்லவா. எனவே எளிதாக மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட்டிருப்பேன்.
அதுமட்டுமல்லாது எதிர்மறை விமர்சனங்களுக்கும் ஆளாகியிருப்பேன்'' என்று கூறியுள்ளார். இந்நிலையில் பிரீத்தி ஜிந்தாவின் இந்த பதிவுக்கு ஹிருத்திக் ரோஷன், அர்ஜூன் ராம்பால், பிரியங்கா சோப்ரா, மலாய்க்கா அரோரா, லில்லி சிங் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அத்தோடு ஒரு சிலர் மாற்றுத்திறனாளிக்கு பணம் கொடுத்து இருக்கலாமே என்று விமர்சித்தும் உள்ளனர்.
Listen News!