பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டது. அதன்படி இந்தப் படத்துக்கு கல்கி 2898 ஏடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸுடன் கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
பகவான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக சொல்லப்படும் கல்கி கேரக்டரில் பிரபாஸ் நடித்து வருகிறார். முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்த பிரபாஸ், தற்போதும் இதிகாச நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். ஆனால், இதில் காமிக்ஸ் படத்தில் வரும் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்கி என்ற டைட்டில் அறிவிப்போடு இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகியிருந்தது.
அதில், பிரபாஸின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. சூப்பர் ஹீரோ என்பதால், ரோபோடிக் முகத்துடன் நடித்துள்ளார் பிரபாஸ். ஏற்கனவே ஆதிபுருஷ் படத்திலும் இதேபோல் நடித்து ரசிகர்களை ஏமாற்றிய பிரபாஸ், இப்போது கல்கியிலும் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத கேரக்டரில் நடித்துள்ளார். பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் போல, இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில், பிரபாஸின் இந்த கேரக்டரை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களை அதிகமாக ட்ரோல் செய்து வரும் உமைர் சந்து, பிரபாஸையும் கலாய்த்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், கல்கி படத்தில் மிகப் பெரிய பண மோசடி நடப்பதாகவும், விரைவில் இதன் விசாரணை தொடங்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், நடிக்க வாய்ப்பே இல்லாத ரோபோடிக் கேரக்டரில் நடித்ததற்கு பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் கல்கி 2898 படத்தில், கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நடைபெற்ற கல்கி க்ளிம்ப்ஸ் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தனது கேரக்டர் குறித்து பேசியிருந்தார்.
Listen News!