கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்தது.
இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் பாகம் அதிக வசூலையும் பாராட்டையும் பெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தில் இடம்பெறும் .அகநக பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அகநக பாடல் குறித்து சேனல் ஒன்றுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்த பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், இந்த பாடல் குறித்த சூழ்நிலையை கதைச்சூழலின்படி விளக்கினார்.
அதன்படி, “இது திரிஷா நடிக்கும் குந்தவை கதாபாத்திரத்துக்கான பாடல். இதில் வந்தயத்தேவனுக்கும் குந்தவைக்குமான டூயட் பாடலாக முதலில் உருவாகவில்லை. இது குந்தவை பாடுகிற பாடல், குந்தவை சோழ தேசத்தின் இளவரசி. பட்டத்து இளவரசனுடைய தமக்கை (சகோதரி). பிற்காலத்தில் பட்டத்து இளவரசன் இறந்து விடுவார், அதன் பிறகுதான் ராஜராஜசோழன் வருகிறார்.
ராஜராஜ சோழனை வளர்த்தது குந்தவை பிராட்டியார். ராஜராஜ சோழனின் பிள்ளைப் பிராயத்தில் இருந்து வளர்த்து ஆளாக்கியவர் குந்தவை பிராட்டியார். அவனை பேரரசனாக மாற்றிய பெருமை குந்தவை பிராட்டியை சேரும். அப்படி இருக்கும்பொழுது அவருக்கு சோழ தேசத்தின் மீது தீரா பற்று இருக்கும். தன்னுடைய தேசம். தன்னுடைய தேசத்தில் இருக்கும் இயற்கை சார்ந்த ஒவ்வொரு மரமும், மலையும், மேகமும் வானமும், பறவையும் என அனைத்தின் மீதும் பற்று இருக்கும். காதல் மட்டும் அல்ல. காதலனுடன் சேர்ந்த இன்னொரு உடமை உணர்வு உண்டு. ஏனென்றால் அவர் அந்த தேசத்தின் இளவரசி. அப்படி இருக்கும்போது அவர் பாடுவதாக அமைய கூடியதுதான் இந்த பாடலின் மனநிலை. மிகப் பெரிய பேரரசனுடைய மகளான இளவரசி அந்த தேசத்திற்குள் பயணிக்கும் பொழுது பாடுகிற மனநிலையையே இந்த பாடல் வரிகளாக உருவாக்கினோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த பாடலுக்கான அர்த்தம் குறித்து பேசிய பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், “அகநக முகநக முருநகையே என்றால், அகம் மலர முகம் மலர்கிறது. உதட்டில் மலர்கிற புன்னகைப்போல என்பதுதான் முறுநகை. அதுபோல பூக்கள் சிரிக்கின்றன. தருநக தருநக வருநனையே என்பதில் தரு என்பது மரம். நனை என்பது பூக்களின் ஒரு பருவ நிலை. ஆக மரம் சிரிக்கும்படியாக மலர்கின்ற பூவே என்பது இதனுடைய அர்த்தம் என்று முடித்திருப்பேன்” என்று விளக்கங்கள் அளித்தார்.
Listen News!