சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகர்கள் மட்டுமல்லாது நடிகைகளும் பன்முகத் திறமை கொண்டவர்களாக மாறி வருகின்றார்கள். அந்தவகையில் கதாநாயகிகள் பலர் தற்போது படம் டைரக்டு செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள்.
உதாரணமாக ரேவதி, கங்கனா ரணாவத், நந்திதா தாஸ், ஹேமமாலினி, பூஜா பட் உள்ளிட்ட பல நடிகைகள் டைரக்டர்களாக மாறி உள்ளனர். இந்த நிலையில் தற்போது தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி, கார்த்தி ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராதிகா ஆப்தேவும் படங்களை இயக்க வருகின்றார்.
இதற்காக அவர் நடிப்புக்கு முழுக்கு போட போகிறார் என்றும் ஒரு தகவல் ஏற்கெனவே பரவியது. இதுகுறித்து ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் "இயக்குநராக வேண்டும் என முதலில் இருந்தே எனக்கு ஆசை உள்ளது. ஆனால் எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். அதுமட்டுமின்றி நான் ஏற்கனவே இயக்குநர் பிரிவில் பயிற்சியும் பெற்றிருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும் "விரைவில் ஒரு படத்தை இயக்க போகிறேன். ஆனால் அதற்கு முன்பு திரைக்கதை பற்றி இன்னும் கொஞ்சம் நான் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக சில இயக்குநர்களிடம் பணியாற்றி பயிற்சி பெற முடிவு செய்திருக்கிறேன். திரைக்கதைகளை கூட தயார் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநர் ஆனாலும் நடிப்பில் இருந்து விலக மாட்டேன். நடிப்புக்குத்தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன்" எனவும் கூறி உள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.
Listen News!