இன்று மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டு விருதை வழங்கினார்கள்.விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி பேசத் தொடங்கியதும் மழை பெய்யத் தொடங்கியது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் புனித் ராஜ்குமார் பற்றி அவர் பேசியதை கேட்டு ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். அந்த விழாவில் ரஜினி பேசியதாவது : “ அனைவருக்கும் கன்னட ராஜ்யோத்சவா வாழ்த்துக்கள். புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள்.
அது அவர் நடிகர் என்பதால் வந்த கூட்டம் அல்ல அவரின் மனிதாபிமானம் மற்றும் ஆளுமைக்காக வந்த கூட்டம். புனிதத்தின் ஆளுமை சிறப்பானது. அவர் கடவுளின் குழந்தை.புனித் ராஜ்குமாரின் முதல் படமான அப்பு படத்தை ரிலீஸுக்கு முன்பே பார்த்தேன். படம் 100 நாட்கள் ஓடும் என்று ராஜ்குமாரிடம் சொன்னேன்.நான் சொன்னபடியே அந்த படம் வெற்றி விழா கண்டது என்பதையும் ரஜினிகாந்த் நினைவு கூர்ந்தார்.
மேலும் புனித் மரணமடைந்த போது தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,அப்போது யாருமே அந்த தகவலை தன்னிடம் சொல்லவில்லை என்றும், மூன்று நாட்களுக்கு பின்னர் தான் புனித் இறப்பு செய்தி தனக்கு தெரியவந்ததாகவும் ரஜினி உருக்கமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!