தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'பேட்ட' படத்தில் மிரட்டலான வில்லனாக சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் நவாசுதீன் சித்திக். மேலும் தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் 'சைந்தவ்' என்ற திரைப்படத்தில் வெங்கடேஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் மிகவும் நேர்த்தியான மற்றும் யதார்த்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் வல்லவரான நவாசுதீன் சித்திக் தற்போது தனது குடும்ப விவகாரம் சம்பந்தமாக பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார்.
அதாவது நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது மனைவி ஆலியாவுக்கும் இடையில் விவாகரத்து செய்த பிறகு தொடர்ச்சியாக பல பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் கணவர் நவாசுதீன் சித்திக் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 2020ம் ஆண்டு துபாய்க்கு சென்று விட்டார் ஆலியா. அதுமட்டுமல்லாது தன்னுடனேயே குழந்தைகளையும் துபாய்க்கு அழைத்து சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் குழந்தைகளுடன் இந்தியா வந்திறங்கியுள்ளார் ஆலியா.
இவ்வாறு ஆலியா இந்தியா வந்ததில் இருந்து ஏதாவது ஒரு மோதல் இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்து கொண்டே இருக்கிறது. அது பல நாட்களாகியும் முடிந்த பாடாகவே இல்லை. இந்நிலையில் பிரிந்து சென்ற தனது மனைவி ஆலியாவின் பாதுகாப்பில் உள்ள தனது இரண்டு மைனர் குழந்தைகளின் இருப்பிடத்தை பற்றி தெரிந்து கொள்ள மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார் நவாசுதீன்.
அந்த வகையில் குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகளை முதலில் பேசி தீர்க்குமாறு நீதிமன்றம் அவர்களுக்கு பரிந்துரைத்தது. தற்போது குழந்தைகள் இருவரும் துபாயில் உள்ள ஒரு பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் இருக்கிறார்கள் என்று நவாசுதீன் சித்திக் அந்த மனுவில் கூறியிருந்தார்.
அதனால் அவர்களின் இருப்பிடம் பற்றி உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் இடையில் சொத்து பிரச்சனை தொடர்பான விவகாரங்களும் நிலவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
Listen News!