பாலிவூட்டின் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர் என்பதோடு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா படம் நாளைய தினம் ( செப் 9) பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாப்பச்சன் நாகர்ஜுனா ஆகியோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர், தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர்.
இப்படம் பான் இந்தியா படமாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், மத்தியபிரதேசம் உஜ்ஜையினில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோயிலில் ரன்பீர் கபூரும் ஆலியா ப்ட்டும் வழிபட சென்றனர். ஆனால், இந்து அமைப்பினர் சிலர் ரன்பீர் கபூரையும் ஆலியா பட்டையும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என கோஷமிட்டு கறுப்புக் கொடி காட்டியுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், கோயில் வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், கறுப்புக் கொடி காட்டியவர்கள் மீது லேசான தடியடி நடத்தி விரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் பாதுகாப்பாக கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபட வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் கோயிலுக்குள் விடாமல் இந்து அமைப்பினர் தடுத்ததன் காரணம் தெரியவந்துள்ளது. 2011ல் ரன்பீர் கபூர் தனது பட விளம்பர நிகழ்ச்சியில், மாட்டிறைச்சி தனக்கு பிடிக்கும் எனத் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி, ரன்பீர் கபூர், ஆலியா பட்டை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரம்மாஸ்திரா இயக்குநர் அயன் முகர்ஜி, "ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் என்னுடன் கோயிலுக்குள் வரமுடியாமல் போனது வேதனையானது" எனத் தெரிவித்துள்ளார்.
Listen News!