தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இருப்பினும் இவர் கன்னட திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற படம் மூலம் தான் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அப்படமானது பெரியளவில் ஹிட் ஆனதைத் தொடர்ந்து ராஷ்மிகாவிற்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து தெலுங்கில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்து தற்போது அங்கு டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்து விட்டார் ராஷ்மிகா.
அதுமட்டுமல்லாது இந்தியில் 3 படங்கள் தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' எனப் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் பான் இந்தியா நடிகையாக தற்போது பட்டையைக் கிளப்பி வருகிறார்.
எது எவ்வாறாயினும் ராஷ்மிகா, சமீப காலமாக தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வந்தாலும், தன்னை அறிமுகப்படுத்திய கன்னட திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் நீண்டகாலமாக இருந்து வருகிறார்.
இதனால் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கன்னட படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கன்னட திரையுலகில் பல விமர்சனங்கள் கிளம்பின.
மேலும் கன்னடத்தில் தயாராகி பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட 'காந்தாரா' படம் வசூலை குவித்து பலரது பராட்டை பெற்ற நிலையில், அந்த படத்தை நான் பார்க்கவில்லை என்று ராஷ்மிகா பேசியது கன்னட ரசிகர்களுக்கு பெரிதும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ராஷ்மிகாவை விமர்சித்து வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர். அதாவது கன்னட படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் வதந்தி பரவியது.
இதனால் கடும் கோபத்திற்குள்ளான ராஷ்மிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ''காந்தாரா படத்தை நான் பார்த்து விட்டேன். 'காந்தாரா' படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளேன். 'காந்தாரா' படம் வெளியானபோது நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை.
மேலும் என்னை இழிவுபடுத்தி கேவலமாக பலர் பேசுகிறார்கள். உண்மை அவர்களுக்கு தெரிவது இல்லை. எனது நடிப்பில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் சொந்த வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். இவர்களின் பேச்சுகளை நான் பொருட்படுத்துவது இல்லை" என்று மிகவும் ஆவேசமாக கூறி உள்ளார்.
Listen News!