திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முக திறமைகளை காட்டியவர் சத்யராஜ். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் கலக்கி இருக்கின்றார். ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்திருக்கின்றார்.
மேலும் சத்யராஜ் இப்போதும் நல்ல கதாபாத்திரம் உள்ள படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேசமயத்தில் சமூக பிரச்சனைகள் குறித்தும் எப்போதும் தனது கருத்தை தைரியமாக தெரிவிப்பார், அதனால் சில பிரச்சனைகளையும் இவர் சந்தித்து வருவது வழமை.
இந்நிலையில் இலங்கை மக்களுக்காக தனது மகள் செய்யப் போகும் சேவை குறித்து தற்போது பேசியுள்ளார். அதாவது "இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் என்ற பெயரில், ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரஹாசனும், என் மகள் திவ்யாவும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தத்திட்டத்தில் பயனுள்ள விஷயங்கள் அடங்கியிருக்கிறது. முதலாவது, குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் மற்றும் விவசாயம் என்ற அற்புதமான தொழிலை கற்றுக்கொள்வது அதில் அந்தக் குழந்தைகளின் பெற்றோரையும் ஈடுபடச்செய்வது எனப்பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது. அவர்களுக்கு ஒரு புதிய தொழிலை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அமைய இருக்கிறது. இந்தப்பணிகளில் பூங்கோதை சந்திரஹாசனும், என் மகள் திவ்யாவும் இணைந்து செயல்படுவதை நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் "இந்தநேரத்தில், எம்.ஜி.ஆரின், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஈழத்தமிழர்களின் நலனுக்காக என் மகள் திவ்யா தொடர்ந்து உழைப்பார்" எனவும் தெரிவித்துள்ளார் சத்யராஜ்.
Listen News!