சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு பலதரப்புகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.அதேபோல், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியிட தடைவிதிக்கவும் வழக்கு தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது.
இந்தியில் சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியானது. ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க வகுப்புவாத பிரசாரத்தன்மை கொண்ட திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி உருவாகியுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின.
இந்தப் படத்தின் டீசரில், கேரளாவில் இருந்து 32000 பெண்கள் முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும், அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாகவும் காட்டப்பட்டுள்ளன.
இவையணைத்தும் லவ் ஜிகாத் என்ற பெயரில் திட்டமிட்டு நடைபெறுவதாகவும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தப் படம் வெளியானால் தேவையில்லாமல் மதக் கலவரங்கள் ஏற்படும், மக்களின் அமைதியை சீர்குலைக்கும் என பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் 7.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தப் படம் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பல வலதுசாரி அமைப்புகளால் நேரடியாக இந்தப் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துமே சுத்த பொய் என்றும், உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காட்சிகள், வசனங்கள் உட்பட எல்லாமே உருட்டு எனவும் காட்டமாக விமர்சித்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!