ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தான் தற்போது திரையுலகில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. அதாவது லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் உட்பட மொத்தம் 3கோடியே 60லட்ஷம் ரூபாய் பெறுமதியான நகைகள் காணாமல் போயிருப்பதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் ஒன்றினை அளித்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது ஐஸ்வர்யாவின் வீட்டில் பணியாற்றி கடந்த 6 மாதத்திற்கு முன் வேலையை விட்டு நின்ற 40 வயதான ஈஸ்வரி என்கிற பணிப்பெண்ணின் உடைய வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்ததை கண்டுபிடித்த போலீசார், அவரிடம் பல கோணத்தில் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது ஈஸ்வரி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ஐஸ்வர்யா, அவருக்கு தன் வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வந்து செல்வதற்கான அனுமதி கொடுத்திருக்கிறார். இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரி, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் வீட்டு லாக்கரில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடி வந்திருக்கிறார்.
மேலும் ஈஸ்வரிக்கு 3 மகள்கள் உள்ளதால், தன்னுடைய சொந்த மகளின் திருமணத்திற்காக திருடிய நகைகளின் மூலம் சேமித்து வந்ததோடு, சோழிங்க நல்லூரில் ரூ.95 லட்சத்துக்கு நிலம் ஒன்றையும் வாங்கி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது இவ்வளவு பெரிய தொகைக்கு நிலம் வாங்கினால் யாருக்கும் சந்தேகம் வந்துவிடும் என்பதற்காக, வங்கியில் கடன் வாங்கி அதன்மூலம் நிலம் வாங்கியுள்ள ஈஸ்வரி, அந்த கடனை இரண்டே வருடத்தில் உடனே அடைத்து இருக்கிறார்.
அத்தோடு ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து திருடிய நகைகளை எல்லாம் சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் நகைக்கடையில் விற்பனை செய்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து நகைகளை விற்று அதன்மூலம் ஈஸ்வரி வாங்கிய சொத்துக்கான ஆவணங்களை போலீசார் உடனடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் ஈஸ்வரியிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அதுமட்டுமல்லாது இந்த குற்றச்செயலில் ஈடுபட ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்தது கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவர் தான் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
Listen News!