தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியான சென்னை 28, மங்காத்தா, மாநாடு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய மன்மத லீலை, கஸ்டடி ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன.
இதனை அடுத்து நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்கவுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது. இந்த அதிர்ச்சியை விட வெங்கட் பிரபுவை நம்பியிருந்த 2 மாஸ் ஹீரோக்கள் தற்போது டீலில் விடப்பட்டுள்ளது இன்னும் ஷாக்கிங்காக அமைந்துள்ளது.
கஸ்டடி படத்தை இயக்கிக் கொண்டிருந்த நேரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பை அடிக்கடி சந்தித்து வந்தார் வெங்கட் பிரபு. இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாகவும், அதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சிவகார்த்திகேயனும் வெங்கட் பிரபுவும் பொது நிகழ்ச்சிகளிலும் டிவிட்டரிலும் பேசி வந்தார். ஆனால், விஜய் திடீரென ஓகே சொன்னதால் கிச்சா சுதீப், சிவகார்த்திகேயன் இருவரையுமே வெங்கட் பிரபு டீலில் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால், சிவகார்த்திகேயன், கிச்சா சுதீப் இருவருமே ஏமாற்றத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடமும் வெங்கட் பிரபு அவரது நிலையை எடுத்துக்கூறியுள்ளாராம். தளபதி 68 படத்தை முடித்துவிட்டு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு படம் இயக்கித் தருவதாக வெங்கட் பிரபு வாக்கு கொடுத்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!