காரைக்குடியில், 1945 ஆம் ஆண்டு பிறந்த மணி, மிருதங்கம் வாசிக்க சிறு வயதில் இருந்தே பயிற்சி எடுத்தவர். முதலில் காரைக்குடி ரங்க ஐயனாகரிடமும், பின்னர் விக்கு விநாயகராமின் தந்தையான ஹரிஹர சர்மாவிடமும் இசையைக் கற்றுக்கொண்டார். பல கர்நாடக இசை பிரபலங்களின் ஆஸ்தான மிருதங்க வாசிப்பாளராக இருந்தவர் மணி.
குறிப்பாக, எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் இணைந்து பல கர்நாடக இசை கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார். டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, மதுர சோமு, டி.எம்.தியாகராஜன், டி.கே.ஜெயராமன், லால்குடி ஜெயராமன், சஞ்சய் சுப்ரமணியன், டி.எம்.கிருஷ்ணா போன்ற பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பித்துக்குளி முருகதாஸின் பக்திப் பாடல்களுக்கு மணி தான் எப்போதுமே மிருதங்கம் வாசிப்பார்.
தான் கற்றதை பிற மாணவர்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும் என, மிருதங்கம் வாசிக்க ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிகளை கொடுத்துள்ளார். இவரிடம் பயிற்சி எடுத்த மாணவர்கள் இன்று பல கர்நாடக பாடகர் - பாடகிகளின் இசை கச்சேரியில் மிருதங்கம் வாசித்து வருகிறார்கள்.
77 வயதாகும் மணி இன்று காலை, உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த தகவல் தற்போது இசை ரசிகர்களையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்றைய தினம் மனோ பாலா இறந்த நிலையில், இன்று காலை பிரபல நடன இயக்குநர் சபத்ராஜ் இறந்த தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இசையுலகை சேர்ந்த மற்றொரு லெஜெண்ட் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!