நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சூர்யாவின் 42வது படமாக உருவாகி வருகிறது கங்குவா படம். இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகிவருகிறது. கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் அடர்ந்த காடுகளுக்கிடையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெற்றது.
இந்நிலையில் கொடைக்கானல் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தற்போது படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். சூட்டிங்கின்போது கடுமையான மழையும் பெய்த நிலையில், படத்தின் முக்கியமான காட்சிகளை படக்குழுவினர் எடுத்து முடித்துள்ளனர். படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் மற்றும் காட்சிகள் நடிகர் சூர்யாவை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனிடையே கொடைக்கானலில் சூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து படக்குழுவினருக்கு சூர்யா பிரியாணி விருந்து அளித்துள்ளார். இந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக முதல் முறையாக சூர்யாவுடன் சுப்ரீம் சுந்தர் இணைந்துள்ளார். இந்நிலையில், அவர் இதுகுறித்து தனது சமீபத்திய பேட்டியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தின் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும் சூர்யா எடுக்கும் ரிஸ்க் அதிசயத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
கங்குவா படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் 3டியில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சூர்யாவின் கேரியரில் மிகவும் அதிகமான பொருட்செலவில் உருவாகிவரும் இந்தப் படம் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலும் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!