ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. பல திறமைவாய்ந்த பாடகர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள நிலையில், இதன் புதிய சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக், ராமயா நம்பீசன் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நடுவே அவ்வப்போது சில பிரபலங்கள் கலந்து கொள்வதும் வழக்கம் உண்டு.
அந்த வகையில், சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் டி. இமான் பங்கெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
மேடையில் நடந்த எமோஷனலான தருணம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இமான் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவராக கருதப்படும் ஆட்டோ டிரைவரான விநாயகம் என்பவர் சரிகமப நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.
அப்போது பேசிய ஆட்டோ டிரைவர் விநாயகம், "இவனை ரெண்டரை வயசுல இருந்து நான் தான் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன். காலையில ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகும் போது என் பக்கத்துல தான் இருப்பாரு. ஆட்டோ ஓட்ட கத்து கொடுத்துட்டேன்.
என்ன ஒரு குறைன்னா அவங்க அம்மா இல்ல, 53 வயசுல அவங்க தவறிட்டாங்க. பிள்ளைக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டு ஏப்ரல்ல கல்யாணம் நடந்துச்சு, மே மாசத்துல அவங்க தவறிட்டாங்க. அவருக்கும் (டி. இமான்) வருத்தம் தான், எனக்கும் வருத்தம் தான்.ஸ்கூல் முடிஞ்சு வந்ததுக்கு அப்புறம் நானும், அவரோட அம்மாவும் சேர்ந்து அப்துல் காதர் கிட்ட மியூசிக் கத்துக்க கூட்டிட்டு போவோம். ஒன்பது மணிக்கு மேல தான் இமான் அப்பா எங்க கூட சேருவாரு. 14 வருஷமா நான் வீட்ல சாப்பிட்டதில்ல, இவங்க கூட தான் என் சாப்பாடு. இவரோட முதல் படம் 'தமிழன்' வந்தப்போ அவங்க வணங்குற இயேசுவை விட்டுட்டு என்கிட்ட தான் ஆசீர்வாதம் வாங்குனாரு" என உருக்கமாக குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசி இருந்த டி. இமான், "இவரை நான் பெருசு பெருசுன்னு தான் கூப்பிடுவேன். இவர பத்தி நான் நிறைய இடங்களில் பேசி இருக்கேன். ஆனா இப்படி மேடையிலே கூட நிக்கார வெச்சி பேச வைக்கிறது எனக்கு தான் ரொம்ப பெருமையான விஷயம். நேர்மையா சொல்லப் போனா எங்க அப்பாவோட நான் செலவழிச்ச நேரத்தை விட, நான் அதிக நேரம் இவர்கூட செலவழிச்சுருக்கேன். எங்க குடும்ப உறுப்பினர் தான் இவர். தனி ஒரு மனிதரா நாங்க அவரை பார்த்ததே இல்லை.எங்க அம்மாவோட கடைசி நாட்கள் எல்லாம் அடிக்கடி ஹாஸ்பிடல் போறது வர்றது, இறந்ததுக்கு முன்னாடி ஒரு ரெண்டு மூணு வருஷங்கள் நாங்க போகாத ஹாஸ்பிடல் இல்ல. அப்ப இவரு ரொம்ப பெரிய சப்போர்ட். அம்மாவால ஒரு கட்டத்துக்கு மேல வலி எல்லாம் தாக்குப்பிடிக்கவே முடியல. மே 25ஆம் தேதி அம்மா தவறி போனாங்க. அதுவரைக்குமே "விநாயகம் விநாயகம்" தான் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க" என பழைய விஷயங்களை உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அனைவர் முன்னிலையிலும் விநாயகத்திற்கு பொன்னாடை போர்த்தி அவரை கௌரவிக்கவும் செய்திருந்தார் டி. இமான் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!