இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இருப்பினும் இந்த படம் பல தடைகளைத் தாண்டித் தான் வெளிவந்திருக்கின்றது.
அதாவது கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதனால் இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்ததோடு, பல எதிர்மறையான விமர்சனங்களும் கிளம்பின.
இவ்வாறாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த வாரம் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே ஓடியது. பின்னர் மறுநாள் இப்படத்தை திரையிட மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் மறுத்து விட்டன. எனினும் வடமாநிலங்களில் இப்படம் தொடர்ந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு இப்படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை (மே 12) வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து ட்வீட் செய்துள்ள படத்தின் நாயகி அடா ஷர்மா, “எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. இந்த வார இறுதியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது" என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!