பிரபல வங்கமொழி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை பாயல் சர்க்கார். அத்தோடு இவர் இந்தியிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் படங்களில் மட்டுமல்லாது வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இவர் சினிமாவைத் தாண்டி அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். அந்தவகையில் பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகை பாயல் சர்க்கார் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கொல்கத்தாவில் உள்ள பராக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதாவது அவர் அளித்துள்ள புகார் மனுவில் "எனது செல்போனுக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் வந்தன. அந்த எண்ணை ஆராய்ந்தபோது அது ஜிம் பயிற்சியாளர் என்பது தெரிய வந்தது. அவர் என்னுடைய தூரத்து உறவினரும் ஆவார்.
இதனைத் தொடர்ந்து அந்த எண்ணை நான் பிளாக் செய்தேன். உடனே அவர் இன்னொரு நம்பரில் இருந்து ஆபாச குறுந்தகவல்களையும் புகைப்படங்களையும் எனக்கு அனுப்பினார். அவரது ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றால் எனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று என்னை மிரட்டினார்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Listen News!