இயக்குநர் சேரன் நடிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் ஸ்ரீபிரியங்காவும், லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தமிழ்க்குடிமகன். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அமீர். சாதியை ஒழிக்க படம் எடுத்துவிட்டால் இங்கே சாதி ஒழிந்துவிடுமா என்கிற கேள்வி அனைவர் இடத்திலும் உள்ளது. ஒரு பெயரை நினைவுப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. மாரி செல்வராஜ், மாமன்னன் இசைவெளியீடு விழாவில், தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் பற்றி பேசி இருந்தார். மேலும், இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் படத்தை எடுக்க காரணம் என்று சொன்னார்.
பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றவர்கள் படம் எடுத்துதான் சாதி பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். அதுவரை நாங்கள் அண்ணன் தம்பியாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .சினிமாக்காரர்களால் தான் நாடு மோசமானது என்று சொன்ன போது ஒருவேலை அதிகாரத்தில் இருப்பவர்களை சொல்கிறார் என்று நினைத்தேன்.
ஆனால், இந்த வார்த்தை தேவர்மகன் படம் வரும் போது ஏன் வரவில்லை, சின்னக்கவுண்டர் படம் வரும் போது வரவில்லை. போதும்டா, உங்களால் தான் எங்களுக்குள் சாதி சண்டை வருகிறது என்று ஏன் சொல்லவில்லை.
அப்படி என்றால், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் சொல்வதை மக்கள் காது கொடுத்து கேட்கத் தொடங்கிவிட்டார். அதை அவர்கள் ஆபத்தாக உணருகிறார்கள். இதனால் தான் சாதி பிரச்சனையை ஏற்படுகிறது என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மாரி செல்வராஜ் படங்களில் யாரையும் சண்டைக்கு வாடா என்று கூப்பிடவில்லை. என்னை ஏன் இப்படி நடத்துறீங்க என்று தான் கேட்கிறார்.
சாதி இன்று மேலோங்கி இருப்பதற்கு காரணம் அரசியல் தான். சாதியை பிடித்துக்கொண்டு இருப்பது அரசியல், அதை உயிர்ப்போடு வைத்து இருப்பது அரசியல், அப்படி அந்த அரசியல் மாற்றத்தை நிகழ்ந்த வேண்டும் என்றால் அதற்கு சினிமா தேவை. சினிமாவால் சாதியை ஒழித்துவிடமுடியாது. ஆனால், சினிமாவின் மூலம் பேசப்படுகிற விவாதங்களின் மூலமாக, கேட்கப்படும் கேள்விகளின் மூலமாக அது ஒரு புதிய அரசியலை தேர்ந்து எடுக்கும். அந்த அரசியல் தான் சாதியை ஒழிக்கும் என்று இயக்குநர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!