தமிழில் 'பத்ரி' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக என்ட்ரி ஆனவர் நடிகை பூமிகா. ஜானு என்ற கேரக்டரில் விஜய்யின் பெஸ்டியாக நடித்து ரசிகர்களை வசீகரித்த பூமிகா, தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்தார்.
இவ்வாறு பல படங்களிலும் கதாநாயகியாக நடித்து வந்த அவர் திருமணத்துக்கு பிறகு சிறிய இடைவெளி விட்டு தற்போது குணசித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார் பூமிகா.
அதாவது "இந்தியில் என் முதல் படம் தேரே நாம். இப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றதும் ஒரு பெரிய பட நிறுவனத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் ஓகே செய்தேன். ஆனால் தயாரிப்பாளர் மாறியதால் என்னை உடனடியாக நீக்கி விட்டனர்.
பின்னர் அந்தப் படத்திற்காக ஒரு ஆண்டு முழுவதும் வேறு எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் காத்திருந்தேன். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதைவிட இன்னும் அதிகமாக வேதனைப்படுத்திய சம்பவம் என்னவென்றால். ஜப் வி மெட் என்ற படத்தில் முதலில் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். பிறகு கரீனா கபூர் அந்த படத்தில் நடித்தார். என்னை அதிலும் நீக்கி விட்டனர்.
அதேபோல முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்திலும் நான் கையெழுத்திட்டேன். ஆனால் அந்த படத்தில் இருந்தும் உடனடியாக என்னை நீக்கி விட்டார்கள். மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் முதலில் என்னை ஒப்பந்தம் செய்தனர். கடைசியில் அவர்களும் கை விரித்து விட்டார்கள்'' என மிகவும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார் நடிகை பூமிகா.
Listen News!