அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் தான் டாடா.இப்படத்தில் கவினுடன் இணைந்து அபர்ணா தாஸ் K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரிஷ், பிரதீப் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளார்கள்.ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.
முன்னதாக டாடா திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகிய போதே மக்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தொடர்ந்து, திரைப்படமும் வெளியான சூழலில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சிறந்த படமாகவும் மாறி உள்ளது.
இந்த நிலையில்,படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, அதிக கவனம் பெற்று வருகிறது
தனது டுவிட்டர் பக்கத்தில் வாட்ஸ் அப் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ள கணேஷ்பாபு, அதில் அவருடைய கல்லூரி தோழி ஒருவர் டாடா படம் பார்த்துவிட்டு அனுப்பிய மெசேஜ்ஜை குறிப்பிட்டுள்ளார். அதில் படம் சிறப்பாக இருந்ததாகவும், வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் கணேஷ் பாபுவின் தோழி தெரிவித்துள்ள நிலையில், அவர் ஒரு தாயாக தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டாடா படம் பார்த்த பின்னர் தனது கணவருடன் இணைந்து வாழ விருப்பப்படும் அவர், அதற்காக ஏதேனும் காரணங்கள் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்த கணேஷ் பாபு, "இதுதான் எனக்கு நிஜமான வெற்றி. இவர் என்னுடைய கல்லூரி நண்பரில் ஒருவர். டாடா படத்திற்கு கிடைத்த சிறந்த விமர்சனம் இதுதான். டாடா படத்தை எங்களுக்கு ஸ்பெஷலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!