தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். இவர் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' மூலம் படத்தயாரிப்புக்காக எனக் கூறி மதுரை அன்புச்செழியனின் 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
இது குறித்து விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும், லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷால் அந்தக் கடனை திருப்பி செலுத்தாது தான் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தை வெளியிடக் கூடாது எனத் தடை விதிக்குமாறு கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டு இருந்தது.
கடந்த முறை இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, அவரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு கோரி விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்திருந்தது. இதன் போது "சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் விஷால் தரப்பு அதனைத் தாக்கல் செய்யவில்லை" என லைகா சார்பில் விஷால் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் விஷால் தரப்பினர் "தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு அடுத்த மாதம் தான் இனி விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென" கோரியுள்ளனர்.
விஷாலின் இந்தக் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா தரப்பு "தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்காததால், பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதிட்டனர்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்குப் பின்னர் விசாரிப்பதாக கூறி, மனு மீதான விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு மீண்டும் தள்ளிவைத்து உத்தர விட்டுள்ளார்.
Listen News!