சிகப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த 4 பேர் விஷால் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்ததை அடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருவதற்கு தயாராகி வருகின்றன. இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விஷாலின் வீட்டின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்கிய சம்பவம் திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நடிகர் விஷால் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.மேலும் இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிகப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த 4 பேர் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் நால்வரும் புதுக்கோட்டையை சேர்ந்த சிவில் இஞ்ஜினியர் மணிரத்னம், சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரவீன் குமார், அண்ணாநகரைச் சேர்ந்த மீன் வியாபாரியான ராஜேஷ், மற்றும் அதேபகுதியில் ஓட்டல் நடத்தி வரும் சபரீஸ்வரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேற்கொண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவம் நடந்தபோது அவர்கள் குடி போதையில் இருந்ததாகவும், அவர்கள் நால்வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக விஷால் வீட்டின் மீது கல்பட்டு கண்ணாடி உடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.இவ்விவகாரம் தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Listen News!