பிறர் மனதை புண்படுத்தாமல் சிரிக்க வைத்த சின்னக்கலைவாணர் தன் ரசிகர்களை அழ வைத்து விட்டு சென்ற நாள் இன்று. அவரது நினைவு நாளில் அவர் தன் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கலாம்..
விவேக் 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் தமிழ் நாட்டில் உள்ள மதுரையில் சிவ.அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும். விவேக் பள்ளிப்படிப்பை மதுரையில் படித்து முடித்தவர். தான் சிறுவயதாக இருந்த போது இந்திரா காந்திக்கும் தனக்கும் ஒரேநாளில் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொண்டு அவருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதையடுத்து இந்திராகாந்தியும் விவேக்கை வாழ்த்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
பின்னாட்களில் மதுரையிலேயே அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர்.
பிறகு தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். பின் அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் எழுதி வெற்றிப்பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணியாற்றினார் சேர்ந்தார். பின்னர் தன் பணியை ராஜினாமா செய்து விட்டு நாடகங்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து இயக்குநர் சிகரம் பாலசந்தரின் அறிமுகம் கிடைத்ததை அடுத்து 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் நடிகை சுஹாசினியின் தம்பியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சினிமாவிற்கு வந்த பிறகுதான், விவேகானந்தன் என்கிற தனது பெயரை விவேக் என்று, அவர் மாற்றி அமைத்துக்கொண்டார்.அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், விவேக் நகைச்சுவை நடிகராக இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற ஒற்றை வசனத்தால் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
இதையடுத்து தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திரங்களான அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, மாதவன், தனுஷ் உள்ளிட்ட ஏராளமான இளம் ஹீரோக்களுடன் நடித்து வந்தார். வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிக்காமல், என்எஸ்கே பாணியில் நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை இணைத்து சினிமா ரசிகர்களை சிரிப்போடு சேர்த்து சிந்திக்கவும் வைத்தார்.
பொதுவாக 2000களில் இளைஞர்கள் தன் நண்பர்களுக்குள் அடிக்கும் லூட்டியை போன்று இருந்தது விவேக்கின் நகைச்சுவை.
பொதுவாக தன் நகைச்சுவையில் மூட நம்பிக்கை, மக்கள் தொகை பெருக்கம், ஊழல், லஞ்சம், போன்றவையே கருப்பொருளாகக் கொண்டு அவற்றில் நக்கல், நையாண்டி, என்று சேர்த்து சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
இதனால் ஒருகட்டத்தில் அவரது ரசிகர்கள் அவரை சின்ன கலைவாணர் என்ற அடைமொழியால் அழைக்கத்தொடங்கினர்.
விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத்தலைவருமான அப்துல் காலம் அவர்களின் தீவிர பற்றாளரான விவேக் சொந்த வாழ்க்கையிலும்சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கு இணங்கி சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன் எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.
இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, ஃபிலிம்ஃபேர் விருது மூன்று முறை வழங்கப்பட்டது. தமிழ் நாடு அரசின் மாநில விருது மூன்று முறை வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தேசிய தமிழ் திரைப்பட விருதுகள் பெற்றார். சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது என உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மறைந்த தன் மகன் சாய் பிரசன்னா நினைவாகத் தொடங்கப்பட்ட டிரஸ்ட் மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு தன்னாலான உதவியைச் செய்து வந்தார்.
இந்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் விவேக் மாரடைப்பு காரணமாக 17 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்றளவும் அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக அவரது பிரிவு உள்ளது. அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவரது நினைவு நாள் இன்று திரையுலகம் சோகத்தில் உள்ளது.
Listen News!