மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும், திரைப்பட இயக்குநர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கொடியங்குளத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கி இருந்த திரைப்படம் 'கர்ணன்'. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் எதார்த்தமான இயக்குநராக அனைவரது மனதிலும் நிலைத்து நின்றார் மாரி.
இவருடைய இயக்கத்தில் நடிக்க, பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடந்தாண்டு நடிகரும் - தயாரிப்பாளருமான உதயநிதியை வைத்து படம் இயக்க உள்ளதாக அறிவித்தார். 'மாமன்னன்' என பெயரிடப்பட்ட இப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், படத்திற்கு தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும், வெற்றி பெற்றுள்ள 'மாமன்னன்' படத்தை பட குழுவினரும் ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில், உதயநிதி-க்கு தந்தையாக... இப்படத்தில் நடித்திருந்த வடிவேலுவுக்கு படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது திடீரென நடிகர் வடிவேலுவின் வீட்டிற்கு விசிட் அடித்து, அவருக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து கவுரவித்துள்ளனர் 'மாமன்னன்' பட இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் மாமன்னன் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பட குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து நேற்று இரவு ட்வீட் போட்டது மட்டும் இன்றி, இயக்குனர் மாரி செல்வராஜ் சந்தித்து வாழ்த்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!