ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏதாவது ஒரு படம் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றது. அந்த வகையில் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
துணிவு படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். மேலும் போனி கபூர் பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு மிகக் குறுகிய காலமே இருப்பதால் துணிவு படத்தின் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO என்கிற அரசு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில், துணிவு படத்தின் போஸ்டருடன் கூடிய வகையில் டுவிட் ஒன்று போடப்பட்டது.
அந்த டுவிட்டர் பதிவில் “மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கிட தன் உயிரை பணயம் வைத்து பாடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த டுவிட் ஆனது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏனெனில் துணிவு படத்தை தற்போது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதியின் சொந்த நிறுவனம் வெளியிடுவதால், அதனை புரமோட் செய்வதற்காகவே இவர்கள் இவ்வாறு டுவிட் போட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது.
அதாவது உதயநிதி படம்னா அரசு நிறுவனத்தில் புரமோட் செய்வீர்களா? என்று நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்புகள் வலுத்ததால், தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO-வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த துணிவு டுவிட் நீக்கப்பட்டு உள்ளது.
மேலும் TANGEDCO நிறுவனம் மக்களிடையே மின்சாரத்துறை பற்றிய அறிவிப்புகள் எளிதில் சென்று சேரும் விதமாக பட காட்சிகளை வைத்து இவ்வாறான மீம்ஸ்கள் பல பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!