வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமானது வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறுபுறம் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது.
இதற்கான காரணம் என்னவெனில் இப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்க முடியாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திடீரென திட்டவட்டமாக அறிவித்தமை தான்.
அதாவது அந்த நாளில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க முடியும் என்றும் தமிழ் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் டப்பிங் படம் என்பதால் அதற்கு குறைந்த அளவிலான தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பானது கோலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தவகையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் உடைய இந்த அறிவிப்புக்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சந்தானம், இயக்குநர் லிங்குசாமி, மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து தமிழ் சினிமா நடிகரும், எம்.எல்.ஏ.வும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
அதாவது 'கட்டா குஸ்தி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட உதயநிதியிடம் வாரிசு பிரச்சனைக்காக பேச்சுவார்த்தை நடத்துவீர்களா அல்லது அங்கு ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்களா என்கிற கேள்வி ஊடங்கள் வாயிலாக எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் உதயநிதி "தெலுங்கு திரையுலகில் போய் நான் எப்படி பேச முடியும் என கூறிவிட்டு இதில் தான் தலையிட முடியாது" என்பதை சூசகமாக சொல்லி இருக்கின்றார்.
Listen News!