தமிழ் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் எனப் பன்முகத்திறமை கொண்ட ஒருவரே வடிவேலு. இவர் 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய 'என் ராசாவின் மனசிலே' என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு முதன்முதலாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படங்களிலும் வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறார்.
இவர் குறிப்பாக 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்து வருகின்றார். அதுமட்டுமல்லாது காமெடி படங்களில் கதாநாயகனாகவும் முத்திரை பதித்துள்ளார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வடிவேலு நகைச்சுவைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் இவரின் மீம்ஸ்கள் தான் அதிகளவில் கொட்டி கிடக்கின்றன.
இன்றுவரை காலமும் படங்களில் குணசித்திர நடிகராகவும், பாடகராகவும் தன்னை அடையாளப்படுத்தி உள்ள வடிவேலு இதுவரை எந்த படத்திலும் வில்லனாக வடிவேலு நடித்தது இல்லை.
அவரை வில்லனாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் அனைத்து இயக்குநர்களுக்குமே இருந்து வந்தது. ஆனால் இதற்கு தற்போது முற்றுப்புள்ளி ஒன்று கிடைத்திருக்கின்றது.
அந்தவகையில் புதிய படம் ஒன்றில் வடிவேலுவை பயங்கர கொலைகள் செய்யும் கொடூரமான வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. அதாவது ஜி.வி.பிரகாஷ் அடுத்து ராம்பாலா டைரக்டு செய்யும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில்தான் வடிவேலுவிடம் வில்லனாக நடிக்குமாறு கூறி பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகிறது. மேலும் வடிவேலுக்கு இப்படத்தின் கதை பிடித்துள்ளதாகவும் எனவே வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் படக்குழுவினர் நம்புகிறார்கள். இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் வில்லத்தனம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வத்தில் உள்ளனர்
Listen News!