இந்தியளவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் வாணி ஜெயராம். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 19 மொழிகளில் பல பாடல்கள் பாடி அசத்தியிருக்கின்றார்.
இவரின் காந்தக் குரலிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை எனலாம். பல பாடல்களை நமக்காக தந்தது மட்டுமல்லாமல் மூன்று முறை தேசிய விருதும், பத்ம பூஷன் விருதும் பெற்று சாதனை படைத்திருக்கின்றார். இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 78 வயதாகும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். அவர் தலையில் அடிபட்ட நிலையில் அவரது வீட்டில் இறந்து கிடந்ததால் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என போலீசார் வழக்குப்பதிவு செய்து பல கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து வாணி ஜெயராமின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பாடகி வாணி ஜெயராமின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கின்றது. அதில் வாணி ஜெயராம் கீழே விழுந்ததில், அவர் தலையில் அடிபட்ட காயமே அவரது மரணத்திற்கு காரணம் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது படுக்கையறையில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேஜை மீது விழுந்ததில் தான் வாணி ஜெயராமுக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது என்றும் இதனால் தான் அவர் இறந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மேஜையில் அடிபட்டு அதன் மூலமாக ஒருவர் இறந்திருக்கின்ற இந்த விடயமானது திரையுலகையே இன்னமும் அதிர்ச்சியில் தான் உறைய வைத்திருக்கின்றது.
Listen News!