தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை வி.வசந்தா உடல்நல பிரச்சனையால் காலமானார். அவருக்கு வயது 82. தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையில் பார்த்து மகிழ்ந்த கதாப்பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் தவறி போகும்போது அது பேரிடியாக மாறுகிறது. இந்தாண்டில் மட்டும் 3 திரைப்பிரலங்களின் மரணங்கள் அனைவரையும் உலுக்கியது.
காமெடி நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா, பிரபல இயக்குநர் டிபி கஜேந்திரன் ஆகியோரது மரணங்கள் ஏற்படுத்திய சோகத்தில் இருந்தே மீள முடியாத தருணத்தில், பழம்பெரும் நடிகை வி. வசந்தாவின் மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடக குழுவில் தான் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த 'இரவும் பகலும்' என்ற திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அசோகனுக்கு ஜோடியாக கார்த்திகை தீபம் என்ற படத்தில் நடித்தார்.
இது மட்டுமின்றி, நடிகை வி.வசந்தா, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 'ராணுவ வீரன்' என்ற படத்தில் அவருடைய தாயாகவும், மூன்றாம் பிறை திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கும் தாயாராகவும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார்.
வயது மூப்பு காரணமாக நடிகை வி.வசந்தாவுக்கு அண்மைகாலமாகவே சில உடல்நல பிரச்சனைகள் இருந்துள்ளன. தகவல்களின்படி, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (மே.19) மதியம் 3.30 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்குகள் இன்று (மே.20) மதியம் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. நடிகை வி. வசந்தாவின் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!