தமிழ் சினிமாவின் மிரட்டலான வில்லன் நடிகர்களில் ஒருவர் நடிகர் பொன்னம்பலம். 1990கள் முதல் தற்போது வரை முன்னணி வில்லன் நடிகராக வலம் வருகிறார் பொன்னம்பலம். அவரது மிரட்டலான நடிப்பில் வெளியான நாட்டாமை, முத்து, அமர்க்களம் ஆகிய படங்கள் பெரும் பெயரை பெற்றுக் கொடுத்தன. கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் பொன்னம்பலம் உடன் பிறந்த சகோதரனே தனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக கூறி பகீர் கிளப்பினார்.
இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது நடந்த சில சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார் நடிகர் பொன்னம்பலம். அதில் தனக்கு உடல்நிலை சரியில்லாத போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவி கேட்டதாகவும், அவர் தொடக்கத்தில் 50ஆயிரம் ரூபாய் கொடுத்தார் என்றும் கூறியுள்ளார். ஆனால் அந்த பணம் கூட தன்னுடைய கைக்கு வரவில்லை என்றும் மருத்துவ கட்டணம் போன்றவற்றிக்கு சென்று விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்த தான் மீண்டும் ரஜினிகாந்திடம் பணஉதவி கேட்டதாகவும், அப்போது நடிகர் ரஜினிகாந்திடம் பெரிய தொகையை எதிர்பார்த்ததாகவும் ஆனால் அவர் 50ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு ரஜினிகாந்தின் மனைவி கவலைப்பட வேண்டாம், சிகிச்சை செலவு முழுவதையும் தான் பார்த்துக்கொள்வதாக நம்பிக்கை கொடுத்தார் என்று கூறியுள்ள பொன்னம்பலம், ஆனால் தன்னை சேர்க்க அரசு மருத்துவமனையை தேடிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையை தான் குறை சொல்லவில்லை என்றும்,அங்கே மருந்துகள் வாங்க வரிசையில் நிற்க வேண்டும், சிகிச்சை முடியவே மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் வேதனைப்பட்டுள்ளார் . ஏற்கனவே நடிகர் அஜித்தை தனது தம்பி போன்று நினைத்தேன் ஆனால் அவர் விசாரிக்கவில்லை என்றார். இதேபோல் விஜய்யும் விசாரிக்கவில்லை என்ற அவர் தெலுங்கு நடிகர்கள் பலர் உதவி செய்ததாகவும் நடிகர் சிரஞ்சீவி போன் போட்டதும் 40 லட்சம் ரூபாய் கொடுத்தார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!