தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவர் சினிமாவில் அறிமுகமாகிய புதிதில் சந்திக்காத அவமானங்களே இல்லை எனலாம்.இருப்பினும் தன்னுடைய விடா முயற்சியினால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்பொழுது லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது என்னை போன்றே என் மகனுக்கும் அர்த்தமுள்ள பிடிவாதம் உண்டு. அந்த பிடிவாதத்தால் தான் என் மகன் இன்று இந்த இடத்தில் இருக்கிறார். 1992ம் ஆண்டு நான் நடிகனாக வேண்டும் என விஜய் என்னிடம் கூறினார்.
நான் முடியாது என்றேன். வேறு ஏதாவது ஆகு. டாக்டராகு, நான் உனக்கு மருத்துவமனை கட்டித் தருகிறேன் என்றேன் என்றார்.நான் சொன்னதை கேட்டிருந்தால் அவர் ஒரு டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆகி மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் வாங்கி அப்படியே காலத்தை ஓட்டியிருக்கலாம். அதை பண்ணாமல் பிடிவாதமாக, ஒரு விதத்தில் அவர் அன்று எங்களை மிரட்டினார். சின்னதா ஒரு லெட்டர் எழுதி டைனிங் டேபிளில் வைத்துவிட்டு வீட்டை விட்டு போய்விட்டார்.
நானும், ஷோபாவும் நாள் முழுவதும் அவரை தேடினோம். ஒரே பிள்ளை, எப்படி இருக்கும். அவர் பாட்டுக்கு என்னை தேடாதீர்கள் என்று ஒரு லைன் எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார் என எஸ்.ஏ.சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.நாள் முழுக்க விஜய்யை தேடி அலைந்தோம். கடைசியில் அவர் உதயம் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என நியூஸ் வந்தது. போயி, அங்கிருந்து கூட்டிட்டு வந்தோம். அந்த வைராக்கியம் தான். எங்களை மிரட்டினாரோ, பயமுறுத்தினாரோ ஏதோ ஒன்று.
அந்த வைராக்கியம் இல்லாமல் இருந்திருந்தால் இன்று இருக்கும் விஜய்யை உங்களால் பார்த்திருக்க முடியாது. அந்த வைராக்கியம் தான் இளைஞர்களுக்கு வேண்டும் என்கிறேன் என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.ஒரு பிரபல இயக்குநரின் மகனாக இருந்துமே நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!