நடிகர் விஜய் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்த விஷயமானது அவரின் அரசியல் பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக பலராலும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளிக்கையில் "யார் நினைத்தாலும் விஜயகாந்தைப் போல் வர முடியாது. அறிவுரை வழங்குவதற்கு எல்லாம் இங்கு ஒன்றுமில்லை. அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு" எனக் கூறியுள்ளார்.
அத்தோடு "விஜய் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். பாராட்டுக்குரிய விஷயம். விஜய் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பது பற்றி அவர் தான் கூற வேண்டும், அவரின் அரசியல் பயணம் குறித்து அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். அவர் சொல்வதற்கு முன் அதைப் பற்றி நாமாகவே பேசுவது சரியாக இருக்காது" எனவும் கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
Listen News!