விஜே சித்ரா பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் தான் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டார். முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் இன்று வரை ரசிகர்கள் மனதில் முல்லையாகவே வாழ்ந்து வருகிறார்.
எனினும் இப்போது அந்த சீரியலில் அவருடைய கதாபாத்திரத்திற்கு இரண்டு நடிகைகள் வந்த போதிலும் கூட இவருடைய இடத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை என்பதுதான் மறைக்க முடியாத உண்மை.
இவர் இறந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இவருடைய இழப்பு ரசிகர்களை இன்றுவரை மிகவும் வாட்டி வருகின்றது. அத்தோடு இவர் இறந்த அன்று இதுதான் நடந்தது என்று பல பேர் பலவிதமான பேட்டிகள் கொடுத்து வந்தாலும் உண்மையில் சித்ராவின் கடைசி நிமிடங்கள் என்ன என்பது ஒரு மர்மமாகவே இருக்கிறது. அதாவது சித்ராவின் மறைவு எதனால் நடந்தது என்பது இதுவரைக்கும் சரியாக கண்டறியப்படவில்லை.
இதனையடுத்து இவரின் உயிரிழப்புத் தொடர்பான வழக்கானது சீரியல் போலவே நீண்டு கொண்டு சென்ற வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது சித்ராவின் உடைய உயிரிழப்புக் குறித்த வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றக் கோரி சித்ராவின் தந்தை காமராஜ் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அத்தோடு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடவும் குறித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது முதுமை காரணமாக வழக்கிற்கு திருவள்ளூர் சென்று வர சிரமமாக இருப்பதாகவும் சித்ராவின் தந்தை மனுவில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் இந்த மனுவைத் தொடர்ந்து சித்ராவின் வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!